காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் கடுமையான பதிலை வழங்கியுள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா கூறியதாவது:
“இஸ்ரேல் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 18,430 பேர் குழந்தைகள். நூற்றுக்கணக்கானோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் பட்டினி அபாயத்தில் உள்ளனர். இந்த அழிவை இஸ்ரேல் கட்டவிழ்த்து விடும் நேரத்தில் மத்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது.”
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தனது பதிவில் கூறியதாவது :
“உங்கள் குற்றச்சாட்டு வெட்கக்கேடானது. இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளை அழித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை எதிர்கொள்ளும் போதும், இஸ்ரேல் காசாவிற்கு 2 மில்லியன் டன் உணவை வழங்கி பசியை போக்கியது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. எனவே அங்கு இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல.”
















