பெருமாள்கோவில்பட்டி தீப விவகாரம்  உயர்நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியில் அமைந்துள்ள மண்டு கருப்பணசாமி மற்றும் காளியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவி வரும் சட்டப் போராட்டம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இக்கோயிலைத் திறந்து தினசரி பூஜை நடத்தவும், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அனுமதி வழங்கவும் கோரி அதே ஊரைச் சேர்ந்த சித்தன் பால்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழிபாட்டு உரிமை மற்றும் பக்தர்களின் நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட இடங்களில் தீபத் திருவிழா நடத்த அனுமதி வழங்கி கடந்த டிசம்பர் 2-ம் தேதி உத்தரவிட்டார். மேலும், பக்தர்களின் இந்த உரிமை நிலைநாட்டப்படுவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி சித்தன் பால்ராஜ் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, தமிழக அரசு மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவர் தரப்பில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சர்ச்சைக்குரிய நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும், அங்கு நிலம் மற்றும் தீபம் ஏற்றும் உரிமை தொடர்பாக ஏற்கனவே சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் வாதிட்டனர்.

குறிப்பாக, அந்தப் பகுதி சட்டம் – ஒழுங்கு ரீதியாக மிகவும் பதற்றமானது என்றும், ஏற்கனவே அங்கு 21 வழக்குகள் மற்றும் ஒரு கொலைச் சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், தீபம் ஏற்ற அனுமதிப்பது தேவையற்ற வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் அரசுத் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு உரிமைக்கும் சமூக அமைதிக்கும் இடையே நிலவும் இந்தச் சட்டப் போராட்டம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version