தோப்பூர் – சத்திரம் சாலையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் பீதி!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் மற்றும் சத்திரம் புளியங்குளம் கிராமங்களை இணைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை, தற்போது விபத்துக்கள் நிறைந்த அபாயகரமான பகுதியாக மாறியுள்ளது. நரிக்குடி மற்றும் திருச்சுழி ஆகிய முக்கிய ஊர்களுக்குச் செல்வதற்கு இது ஒரு குறுக்கு வழியாகவும், எளிதான போக்குவரத்துத் தடமாகவும் விளங்கி வருகிறது. நீண்ட காலமாகப் பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காணப்பட்ட இந்தச் சாலை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால், புதுப்பிக்கப்பட்ட சாலையின் பயன் கேள்விக் குறியாகி உள்ளது.

இந்தச் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் சீமை கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் வளைவுகளில் திரும்பும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. மேலும், சாலையோர மரங்களின் கிளைகள் சாலைக்குள் நீண்டு வளர்ந்துள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களைப் பதம் பார்க்கும் நிலையும் நீடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில், போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் அடர்ந்த மரங்களுக்கு இடையே சாலை இருக்கும் இடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் திசைமாறிச் சென்று விபத்தில் சிக்கிக் கொள்ளும் அவலமும் தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு சாலை போடப்பட்டும், இந்த மரங்களால் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாகக் கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்குச் சாலையோரம் இடமில்லாமல் மரங்களுக்குள் புகுந்து காயமடைகின்றனர். அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்கோ அல்லது பணி நிமித்தமாகவோ திருச்சுழி, நரிக்குடி பகுதிகளுக்கு விரைவாகச் செல்ல விரும்புவோருக்கு இந்தச் சீமை கருவேல மரங்கள் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன” என வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, பெரும் உயிர்ப்பலி ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சாலையோர சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி, விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version