தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது: விருதுநகரில் தேர்தல் பார்வையாளர் அதிரடி ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மரு. என்.ஓ. சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநருமான டாக்டர் அ.அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், முகவரி மாற்றம் மற்றும் பிழை திருத்தங்கள் கோரியும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை டாக்டர் அ.அருண் தம்புராஜ் (28.01.2026) அன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது கள விசாரணை முறையாக நடத்தப்பட்டுள்ளதா என்பதையும், சட்ட விதிகளுக்கு உட்பட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த அவர், இது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்களை ஒருவர்கூட விடுபடாமல் கண்டறிந்து, அவர்களைப் புதிய வாக்காளர்களாகப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்திய ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்பதால், தகுதியுள்ள எந்தவொரு நபரும் விடுபடக் கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளப் பாதை உள்ளிட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் (Assured Minimum Facilities) முழுமையாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்துமாறு வாக்காளர் பதிவு அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அரசுப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நேர்மையான மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதன் மூலமே ஜனநாயகம் வலுப்படும் என்பதை வலியுறுத்தி இந்த ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்தது.

Exit mobile version