சென்னை :
புரசைவாக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட திருத்தேர், பக்தர்கள் பக்தி பரவசத்தோடு நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்தது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, காவல்துறையினர் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்தனர். புதிய தேரோட்டம் நடைபெறுவது என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பலர் பங்கேற்றனர்.
கோவில்களுக்கு புதிய வசதிகள் – அமைச்சர் விளக்கம்
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “திமுக ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பக்தர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்” என்றார்.
அவர் கூறியதாவது :
ரூ.81 லட்சத்தில் புதிய தேர் மற்றும் ரூ.14 லட்சத்தில் பழுது நீக்கிய மற்றொரு தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 வருட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 நவம்பர் 28ஆம் தேதி ரூ.4 கோடி செலவில் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. ஜனவரிக்குள் தங்க தேர் தயாரிப்பு முடிக்கப்படும். திமுக ஆட்சி வந்ததிலிருந்து 134 புதிய தேர்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 130 பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. 75 தேர் மராமத்து பணிகள் ரூ.19.20 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
9 இடங்களில் வெள்ளித் தேர் அறிவிக்கப்பட்டுள்ளதிலும், 450 கிலோ வெள்ளி தேர் நெல்லையப்பர் கோவிலுக்காக தயாராகி வருகிறது. குடமுழுக்கு விழாக்கள் மற்றும் திருப்பணிகள், ஒரே நாளில் 24 கோவில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வருகிற ஜூன் 8-ஆம் தேதி 74 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. 2025 இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் கூறினார். திருச்செந்தூர் கோவிலில் ரூ.400 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு ஜனவரி 7 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணி வரை குடமுழுக்கு நடைபெறும்.
குடமுழுக்குக்குப் பிறகு 3 மணி நேரத்திற்குப் பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனை ஒட்டி 6 நாட்கள் திருவிழா நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
முருகன் மாநாட்டைச் சாடும் அமைச்சர்
அமித் ஷா தலைமையிலான இந்து முன்னணியினர் நடத்தும் “முருகர் மாநாடு” குறித்து பேசும் போது, “இது முருகன் மாநாடு அல்ல, சங்கிகள் மாநாடு,” என கடுமையாக விமர்சித்தார்.
“அரசு நடத்தும் மாநாட்டில் 27 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். எங்களைப்போல் திட்டமிட்டு வசூல் செய்யவோ, வாகன ஏற்பாடுகளை செய்வதோ இல்லை. ஆனால், சிலர் இந்து மதத்தின் பெயரில் அரசியல் பிரச்சாரம் செய்ய முயலுகிறார்கள். மதத்தை ஆயுதமாகக் கொண்டு மக்களிடம் பிளவு ஏற்படுத்த நினைக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
தமிழிசை மற்றும் கல்வி விருது விவகாரம்
தமிழிசை சௌந்தரராஜன் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
“அவர் ஒரு அறிவாளர். ஆனால் அவருடைய ஆலோசனைகளை வைத்து நடந்து கொண்டதால்தான் பாஜக தோல்வியடைந்தது. அவரை நேரடியாக ஒன்றிய அரசுக்கே அனுப்பி ஆலோசனை வழங்க சொல்லுங்கள். எங்கள் முதல்வர் ஸ்டாலின், கலைஞரால் பயிற்சி பெறப்பட்டவர். அவருக்குத் தகுதியற்றவர்கள் ஆலோசனை வழங்கத் தேவையில்லை,” என்றார்.
மேலும்,
“விஜய் கல்வி விருது என்ற பெயரில் 300 பேருக்கே வழங்கி விளம்பரமாடுகிறார்கள். ஆனால், திமுக அரசு ஒரு மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 5,000 மாணவர்களுக்கு உதவுகிறது. மாநிலம் முழுவதும் 3.5 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள்,” எனவும் கூறினார்.