நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தில், சந்திரமுகி படக் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, அதன் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
‘டார்க் ஸ்டூடியோ’ தயாரித்து, 2024-ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த ஆவணப்படத்தில், சந்திரமுகி உள்ளிட்ட பிற திரைப்படங்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பாக ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‘சந்திரமுகி’ படத்தின் உரிமையை வைத்துள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம், ரூ.5 கோடி நஷ்டஈடு கோரி புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தனுஷின் வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், நயன்தாரா மற்றும் ஆவணப்பட தயாரிப்பு தரப்புக்கு சட்ட சிக்கல்கள் அதிகமாகி வருகின்றன.