“நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல ; அரசியலமைப்பே உயர்வானது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் !

மும்பை : இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பூஷன் ராமகிருஷ்ண கவாய், மும்பையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அரசியல் மற்றும் நீதித்துறையின் இடையே மதிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

முன்னதாக, முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13 அன்று ஓய்வு பெற்றதையடுத்து, பி.ஆர்.கவாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். இதையொட்டி, மும்பையில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் நடத்திய விழாவில் கலந்து கொண்ட அவர், “நாடு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டமே உயர்வானது,” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி, சமநிலையுடன் செயல்பட வேண்டும்,” என்றார்.

அவமரியாதையா ?

இந்த நிகழ்வின் பின்னணியில் ஒரு வாதப் புள்ளியாக, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் வராதது குறித்து சிக்கல் எழுந்துள்ளது.

இதைக் குறித்துத் தனது சமூக வலைதளத்தில் விசிக எம்பி ரவிக்குமார், “மாண்புமிகு தலைமை நீதிபதிக்கு மரியாதை செலுத்தப்படவில்லையா? இந்த நிகழ்வில் மாநில அதிகாரிகள் வராதது தவறா? அல்லது அதுவே அரசின் நிலைப்பாடா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமை நீதிபதி கவாய் இதுபற்றி தனது உரையில், “இந்த மாநிலத்தின் மகனாக நான் நாட்டின் தலைமை நீதிபதியாகி வந்தபோது, அதிகாரிகள் வரவில்லை என்பது அவர்களின் தேர்வாக இருக்கலாம். இதுபோன்ற சிறிய விஷயங்களில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. இருப்பினும், இது குறிப்பிட வேண்டியது என்று எண்ணினேன்,” என விவரித்தார்.

இந்தச் சூழ்நிலையை மாநில அரசே தெளிவாக விளக்க வேண்டும் என அரசியல் மற்றும் சட்டவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். தலைமை நீதிபதியின் வருகையை ஏற்றுக்கொள்ளாதது மரியாதைக்கேட்டதா என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது

Exit mobile version