கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவியர், தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ‘கிராம தங்கல் திட்டத்தின்’ (Rural Agricultural Work Experience – RAWE) கீழ் கிராமங்களில் தங்கி நேரடிப் களப்பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தென்சங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணையில் மாணவியருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பண்ணையின் உரிமையாளரும், முன்னோடி விவசாயியுமான உமாமகேஸ்வரி, மாணவியருக்கு இயற்கை விவசாயத்தின் அடிப்படைத் தத்துவங்கள், இயற்கை உரக் கரைசல்கள் தயாரிப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவான செயல்விளக்கங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விவசாயி உமாமகேஸ்வரி பேசுகையில், “நவீன கால வேளாண்மையில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தற்காலிக விளைச்சலைத் தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் மண்ணின் வளத்தைச் சிதைத்து, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் மனிதர்களுக்குப் பல்வேறு தீராத உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, இயற்கை வேளாண்மை என்பது மண்ணையும், மனித ஆரோக்கியத்தையும் ஒருசேரப் பாதுகாக்கும் உன்னதமான முறையாகும்,” எனத் தெரிவித்தார்.
இயற்கை உரங்களான பசுந்தாள் உரங்கள், தொழு உரம், கம்போஸ்ட் மற்றும் மண்புழு உரம் (Vermicompost) ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரித்து, மண்ணின் உயிரியல் செயல்பாடுகள் சீரடைகின்றன. இது குறித்து மாணவியருக்கு விளக்கிய அவர், “விவசாயிகள் பயிரிடுவதற்கு முன்பாகத் தங்களது நிலத்தின் மண் மாதிரியைப் பரிசோதனை செய்து, மண்ணின் சத்துக்களை அறிந்து அதற்கேற்பத் திட்டமிட வேண்டும். பயிர் சுழற்சி முறை (Crop Rotation) மற்றும் கலப்புப் பயிர் (Intercropping) சாகுபடியைப் பின்பற்றுவதன் மூலம் பூச்சிக் தாக்குதலை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தலாம். ரசாயனங்கள் தவிர்க்கப்படுவதால் தேனீக்கள், பறவைகள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டுச் சூழலியல் சமநிலை பேணப்படுகிறது,” என்றார். எதிர்கால வேளாண் வல்லுநர்களாக உருவெடுக்கவுள்ள மாணவியர், இந்த நேரடிப் பயிற்சியின் மூலம் இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களைக் கற்றறிந்தனர்.
















