இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்கு வரும் முக்கிய செயல். கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அடுத்த கட்டமான 2021 கணக்கெடுப்பு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
2021 கணக்கெடுப்புக்காக 2019-இலேயே மத்திய அரசு ரூ.8,754 கோடி ஒதுக்கியது. அதேபோல், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்கப்பட்டது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு தள்ளிப்போனது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்படுவதால், அதை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனிடையே, சாதிவாரியான கணக்கெடுப்பும் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதனை அடுத்து, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான தரவுகளும் சேகரிக்க, மத்திய அமைச்சரவை ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய தினம் மேற்கொண்டார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில்,
“16வது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வுக்கூட்டம் மூத்த அதிகாரிகளுடன் நடந்தது. இந்த கணக்கெடுப்பில் முதல்முறையாக ஜாதிவாரி தகவல்களும் சேகரிக்கப்படும். 34 லட்சம் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1.3 லட்சம் புதிய டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பணியை மேற்கொள்வார்கள்”
எனக் குறிப்பிட்டார்.
மேலும், இன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.