“மதுரை ஏர்போர்ட்டுக்கு தேவர் பெயர் சூட்டுக”: ஜெகநாத் மிஸ்ராவின் மதுரை மாநாட்டு முழக்கம்!

தமிழக அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுரையில் எழுச்சி மிகு மண்டல மாநாடு நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பார்மா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, துணைப் பொதுச் செயலாளர் பெரிய சேகரன் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் தில்லை ராஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் சிகர நிகழ்வாக, கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தொண்டர்களிடையே அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளதைக் பறைசாற்றும் விதமாக இந்த மாநாடு அமைந்திருந்தது.

மாநாட்டில் உரையாற்றிய பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, “தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய வீரமிக்க மதுரை மண்ணிலிருந்து நமது மக்கள் முன்னேற்றக் கழகம் தனது பயணத்தைத் தொடங்கியது. கட்சித் தொடங்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே மக்கள் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக, மங்களதேவி கண்ணகி கோவிலைப் புனரமைத்துக் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி, சென்னையில் கால் சிலம்பை ஏந்தி நாம் நடத்திய அறப்போராட்டம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மாநிலம் முழுவதும் ஆறு மண்டலங்களாகப் பிரித்து நாம் மாநாடுகளை நடத்தி வருகிறோம். காஞ்சியில் தொடங்கி, புதுச்சேரியில் வரலாற்றுச் சாதனை படைத்து, இன்று மதுரையில் மாபெரும் வெற்றி மாநாட்டைக் கண்டுள்ளது நமது இயக்கம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக நமது கழகம் நிச்சயம் திகழும்” என்று அதிரடியாகப் பேசினார்.

இந்த மாநாட்டில் தென்மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 10 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றும், அதற்குத் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு வலுவான கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், மதுரை மற்றும் கோவை ஆகிய முக்கிய மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உடனடியாக மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மதுரையின் வரலாற்று அடையாளமான மங்களதேவி கண்ணகிக்குத் தனியாகக் ‘கண்ணகி கோட்டம்’ அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

மாநாட்டில் மாநில முதன்மைச் செயலாளர் சுறா, ஊடகப் பிரிவு செயலாளர் அபுதாஹிர், மாநில நெசவாளரணி அமைப்பாளர் சுப்பிரமணி மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் ரகுபதி, மோகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களுடன் மதுரை மாவட்டத்தின் நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து மாநாட்டைச் சிறப்பித்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில், மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் நடத்திய இந்த மாநாடு மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version