மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே முருக பக்தர்கள் மாநாடு..! – திருமாவளவன்

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை உலக தமிழ் சங்க சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன், திரைப்பட இயக்குனர் அமீர், சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர், இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டார்.

மத்திய அரசுக்கு எதிராகவும், மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தும் இந்து அமைப்புகளுக்கு எதிராகவும் 500க்கும் மேற்பட்டோர் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்று தங்களது எதிர்ப்பையும் ஒற்றுமையையும் கூறினார்கள். தொடர்ந்து திருமாவளவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறும்போது,

மனித சங்கிலி போராட்டம் முருக பக்தர்களுக்கு எதிரானது அல்ல. முருக பக்தர்கள் சனாதன கும்பலின் சதி அரசியலுக்கு இறையாகி விட வேண்டாம் என்பதை சுட்டிக்காட்டவே கூடியிருக்கிறோம். திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அங்குள்ள மக்கள் பகைமையில் இருப்பது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இந்துக்கள் அனைவரும் முருகனை விரும்புபவர்கள். எல்லாக் கட்சியிலும் முருக பக்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், பா.ஜனதாவை வளர்ப்பதற்காகவும், மதத்தின் அடிப்படையில் அரசியல் ஆராயம் தேடுவதற்காகவும் இந்த உத்திகளை கையாளுகிறார்கள். இதற்கு, முருக பக்தர்கள் ஏமாந்து விடவேண்டாம்.

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே இந்த மாநாடு நடக்கிறது. இந்தியா முழுவதும் அவர்கள் இந்த உத்தியை தான் கையாண்டார்கள். அதனைத்தான் தற்போது முருகர் பெயரில் நிகழ்த்த பார்க்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றார்போல், மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

2026 தேர்தல் மட்டுமல்ல அடுத்தடுத்த தேர்தல்களில் தொலை நோக்கு பார்வையோடு தமிழகத்தை கைப்பற்றுவதற்காக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். இதற்கு சில கட்சிகள் துணை போவதுதான் கவலையாக இருக்கிறது. மாநாட்டின் நோக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மற்ற மாநிலங்களில் செய்ததுபோல், மதத்தின் பெயரால் தமிழக மக்களை பிளவுப்படுத்த பார்க்கிறார்கள். அதனை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம் என்று கூறினார்.

Exit mobile version