மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
விரார் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, 4வது மாடியில் வசித்து வந்த ஓம்கார், ஆரோஹி தம்பதியினர், தங்களின் ஒரு வயது குழந்தையின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதுவரை, ஒரு வயது குழந்தை, அவரது தாயார் உள்ளிட்ட 15 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகிழ்ச்சி நிறைந்த பிறந்தநாள் விழா சோகமாக மாறிய இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

















