‘இது நம்ம ஆட்டம்’ மாநிலப் போட்டிக்குச் செல்லும் வீரர்களை வாழ்த்திய தங்க தமிழ்செல்வன் எம்.பி!

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான ‘இது நம்ம ஆட்டம் – 2026’ முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழாவின் மாவட்ட அளவிலான போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்றது. இளைய தலைமுறையினரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், சமூக இணைப்பை மேம்படுத்தவும் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். சரவணகுமார் முன்னிலையில் வழங்கிச் சிறப்பித்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இத்திருவிழாவில், தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் மற்றும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கடந்த 25 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டன. இதில் ஒன்றிய அளவில் திறமைகளை நிரூபித்த 568 வீரர்கள் மாவட்ட அளவிலான இறுதிப்போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்றைய தினம் நடைபெற்ற மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 213 வீரர்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த 71 பேருக்குத் தலா ரூ. 6,000, இரண்டாம் இடம் பிடித்த 71 பேருக்குத் தலா ரூ. 4,000 மற்றும் மூன்றாம் இடம் பிடித்த 71 பேருக்குத் தலா ரூ. 2,000 எனப் பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மாநில அளவிலான போட்டியில் தேனி மாவட்டத்தின் சார்பில் பங்கேற்பதற்காக, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள்) பிரிவில் முதலிடம் பெற்ற பெரியகுளம் அணியைச் சேர்ந்த 7 வீரர்களும், கபடி (பெண்கள்) பிரிவில் முதலிடம் பெற்ற ஆண்டிபட்டி அணியைச் சேர்ந்த 8 வீராங்கனைகளும் என மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அளவிலும் தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று (31.01.2026) மாவட்ட அளவில் ஓவியப் போட்டி, கோலப்போட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வம், பழனிச்செட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Exit mobile version