மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்ததால் பல குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் பிரவீன் சோனிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 20 குழந்தைகள் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மருந்தை குழந்தைகளுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படும் டாக்டர் பிரவீன் சோனியை போலீசார் கைது செய்திருந்தனர். மருந்தை குடித்த குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் பலர் உயிரிழந்தனர்.
பின்னர் நடைபெற்ற ஆய்வகச் சோதனைகளில், அந்த சிரப்பில் பொதுவாக ஆன்டிஃபிரீஸ் மற்றும் பிரேக் திரவங்களில் காணப்படும் நச்சு இரசாயனமான டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்தை தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரும் தற்போது விசாரணையில் உள்ளார்.
போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், டாக்டர் சோனி மருந்து நிறுவனத்திடமிருந்து மருந்தை பரிந்துரைத்ததற்காக 10% கமிஷன் பெற்றதாக தெரிவித்தனர். மேலும், அந்த கமிஷன் தொடர்பாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறினர். இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது.
விசாரணையில், ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 4 வரை, ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகளுக்கு டாக்டர் சோனி இந்த சிரப்பை பரிந்துரைத்தது தெரியவந்தது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் குழந்தைகள் மரணமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மத்திய அரசு, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலையான டோஸ் காம்பினேஷன் (FDC) மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என முன்பே அறிவுறுத்தியிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், பாதகமான விளைவுகளை அறிந்தபின்னரும் டாக்டர் சோனி அந்த மருந்தை தொடர்ந்து பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், டாக்டர் சோனியின் வழக்கறிஞர், “கோல்ட்ரிஃப் சிரப் கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது; அதன் தரம் அல்லது உருவாக்கத்திற்கான பொறுப்பு மருத்துவருக்கில்லை. அவர் நச்சு கலவைகள் இருப்பதை அறியாமலேயே நல்லெண்ணத்தின் அடிப்படையில் பரிந்துரைத்தார்” என வாதிட்டார்.
இவ்வாதத்தை ஏற்காத நீதிமன்றம், ஜாமீன் மனுவை நிராகரித்து டாக்டர் பிரவீன் சோனியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.