பொல்லான் நினைவரங்கிற்கு இடம் கொடுத்த 6 குடும்பங்களுக்கு சிறப்பு அனுமதி மூலம் வீடு  அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில், தீரன் சின்னமலையின் படைத்தளபதியும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பொல்லான் அவர்களுக்குச் சிலையுடன் கூடிய பிரம்மாண்ட நினைவரங்கம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உன்னதப் பணிக்காகத் தங்களின் வாழ்விடத்தை மனமுவந்து வழங்கிய ஆறு குடும்பங்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு அனுமதியுடன் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேற்று வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயனாளிகளுக்குத் தலா ஒரு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் முறைப்படி கையளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், “சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கத் திட்டமிடப்பட்ட போது, அந்த இடத்தில் ஆறு குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வந்தனர். அவர்களிடம் முறையான வீட்டுமனைப் பட்டாக்கள் இல்லாத போதும், நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு வீரரின் நினைவிடம் அமைவதை உணர்ந்து, அவர்கள் தாமாக முன்வந்து தங்களின் வீடுகளைக் காலி செய்தனர். அவர்களுக்கு உடனடியாக மாற்று இடங்கள் வழங்கப்பட்டுத் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் வசிக்கும் பகுதி பேரூராட்சி எல்லையில் வருவதால், வழக்கமான அரசுத் திட்டங்களில் வீடு கட்ட நிதி வழங்குவதில் சட்டச் சிக்கல்கள் இருந்தன. இது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அக்குடும்பங்களின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு அனுமதி பெறப்பட்டது. அதன் விளைவாகவே இன்று இந்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது,” என விளக்கினார்.

மேலும், வரும் 28-ஆம் தேதி பொல்லான் நினைவேந்தல் நிகழ்ச்சி அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பொல்லானுடன் இணைந்து பணியாற்றிய மற்ற வீரர்களுக்கும் சிலைகள் அல்லது நினைவிடங்கள் அமைக்கக் கோரிக்கைகள் வந்தால், அவை வரலாற்று ஆய்வாளர்களின் ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்தச் சூழலில், இப்பிரச்சனை தொடர்பாகப் பின்னணியில் நடந்த அரசியல் நகர்வுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. நினைவிடத்திற்காக இடம் கொடுத்தவர்கள் மற்றும் பட்டா கோரி காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த சில காலமாக அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களைத் திரட்டி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பாஜகவின் இந்தத் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து, தற்போது முதற்கட்டமாக நிலம் வழங்கிய ஆறு பேருக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளின் குடும்பத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Exit mobile version