வேலூரில் உருவானது எம்.ஜி.ஆரின் எஃகு கோட்டை: 3 கோடியில் பிரம்மாண்ட ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மகா கும்பாபிஷேகம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலம் பகுதியில் உள்ள ரகுபதி நகரில், தமிழக மக்களின் இதயக் கனி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்காக ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆலயம், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷங்களுக்கு இடையே மகா கும்பாபிஷேகத்துடன் இன்று அரங்கேறியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. ரகுபதியின் மகனும், தீவிர எம்.ஜி.ஆர் பக்தருமான டி.ஆர். முரளி அவர்களின் அயராத முயற்சியால், ‘ஸ்ரீ ராமசந்திரசேரூரி டபுள் டிரஸ்ட்’ மூலம் இந்த பிரம்மாண்டமான கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் ஆன்மீக எல்லைகளைக் கடந்து, ஒரு மக்கள் தலைவனுக்கு எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயம், வேலூர் மாவட்டத்தின் புதிய அடையாளமாக மாறியுள்ளது.

இந்த ஆன்மீக மற்றும் எழுச்சிமிகு விழாவிற்குச் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். விழாவின் தொடக்கமாக, சி.கே. ரவி ஐயர் மற்றும் எஸ். பாலாஜி ஐயர் ஆகியோரின் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் அதிர மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. யாகசாலையில் வளர்க்கப்பட்ட புனித நீரைத் தாங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுரக் கலசங்களின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் கருவறையில் வடிவமைக்கப்பட்டிருந்த கம்பீரமான ஐம்பொன் எம்.ஜி.ஆர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்புத் தீபாராதனைகள் காட்டப்பட்டன. ‘வாழ்க வாழ்க எம்.ஜி.ஆர்’ என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முதற்கால பூஜையாக விக்னேஸ்வர பூஜை மற்றும் வருண பகவான் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி என ஆகம விதிகளின்படி அனைத்துச் சடங்குகளும் செம்மையாக நிறைவேற்றப்பட்டன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல தொழிலதிபரும் திருமலை திருப்பதி தேவஸ்தான முக்கியப் பிரமுகருமான சேகர் ரெட்டி, வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஜி.வி. செல்வம், தொழிலதிபர் சேம்பள்ளி நாகராஜ், துர்கா பவன் நிறுவனர் கே.எஸ். உதயசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version