“இது மதிமுக இல்லை ; மகன் திமுக !” – உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய மல்லை சத்யா !

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து, அதே கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று சென்னை சிவானந்தா சாலையில் தொடங்கப்பட்டது.

“மதிமுக இல்லை, மகன் திமுக!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பகுதிநிர்வாகிகள், மாவட்டத் துணை நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணிகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வடசென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னாள் எம்.பி ஈரோடு கணேசமூர்த்தி, போராட்டத் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கட்சி முறையில் விலக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த 5 பேருக்கு மரியாதை செலுத்தினார்.

மல்லை சத்யா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :

“வைகோ அவர்கள், மகன் துரை வைகோவின் வருகைக்கு முன் 28 ஆண்டுகள் ஜனநாயகவாதியாக இருந்தார். இன்று மதிமுக ‘மகன் திமுகவாக’ மாறியுள்ளது. அடிமட்ட தொண்டர்களுக்கு மரியாதையின்றி அலட்சியமாக நடத்தப்படுகிறது. கடந்த 9ம் தேதி, ‘மல்லை சத்யா துரோகி’ என கூறியதன் காரணமாகவே, மக்களிடம் நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன்.”

தன் பதவி குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார் :

“இன்றும் மதிமுக துணை பொதுச்செயலாளராக இருக்கிறேன். வைகோவால் நீக்கப்படவில்லை, நானும் விலகவில்லை.”

துரை வைகோவின் அணுகுமுறை குறித்து அவர் கூறியது :

“அவர் இணைப்பு தரும்போது கைகளை அல்ல, புறங்கையையே கொடுத்தார். இதயங்களும் இணையவில்லை. இயக்கத்தில் ‘காலில் விழக் கூடாது’ என்று ஆரம்பித்தவர், இப்போது என் பெயரில் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதன் காரணம் நானல்ல, வைகோவும், அவரது மகனும் தான்.”

வார்த்தை கடைசியில், அவர் கூறியது :

“மரண தண்டனை கைதிகளுக்கும் கடைசி ஆசை இருக்கிறது. ஆனால், விளக்கம் கேட்காமல் நிர்வாகிகளை நீக்கும் செயல் தவறு. மதிமுகவில் உள்ளக ஜனநாயகத்தை பாதுகாக்கவே இந்த போராட்டம் நடைபெறுகிறது.”

Exit mobile version