மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிகமாக விளைந்துள்ள நிலையில், விற்பனைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதே நேரத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும், தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியனும் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருப்பது விவசாயர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலை வீழ்ச்சி – விவசாயிகள் நஷ்டத்தில்

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாம்பழங்கள் பெருமளவில் விளைந்துள்ளன. அதேபோல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் அதிக உற்பத்தி ஏற்பட்டுள்ளது. இது விலையை கணிசமாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.150 வரை விற்ற மாம்பழங்கள், தற்போது கிலோவுக்கு ரூ.40க்கும் கீழ் விற்பனை ஆகின்றன. சில இடங்களில், 3 கிலோ ரூ.100க்கே விற்பனை நடைபெறுகிறது.

மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகள், தற்போது கொள்முதல் விலையை கிலோ ரூ.4 என நிர்ணயித்துள்ளன. கடந்த ஆண்டு இது கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை இருந்தது. மேலும், தமிழக மாம்பழங்களை வாங்குவதற்கு ஆந்திரா தடை விதித்துள்ளதால், விற்பனைக்கே வாய்ப்பு இல்லை. பல டன் மாம்பழங்கள் வீணாகி குப்பைகளிலும் நீர்நிலைகளிலும் அகற்றப்படுகின்றன.

அமைச்சரின் வெளிநாட்டு பயணம் – விவசாயிகள் அதிருப்தி

விவசாயிகள் கடும் நஷ்டத்தில் தவிப்பது ஒருபுறம் இருக்க, வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்டக்கலைத் துறை இயக்குநர் அமெரிக்கா பயணம் செய்துள்ளனர். இந்த பயணம், விவசாயிகள் பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் போக காரணமாக அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் இயக்குநர் குமரவேல் பாண்டியன் இருவரும் ஜூன் 29ம் தேதி திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி கடும் கண்டனம்

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக, மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கர்நாடக மாநில விவசாயிகளுக்குப் போல, தமிழக விவசாயிகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

இழப்பீடு வேண்டும்

‘கர்நாடக விவசாயிகளுக்கு வழங்குவது போல, தமிழக மாம்பழ விவசாயிகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கையில் : மாம்பழம் விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான குரலாய் அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரியில் கடந்த 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கலில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என, இந்த போராட்டங்களின் போது வலியுறுத்தினோம்.

ஆனால், வழக்கம்போல தி.மு.க., அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண் துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில், ‘பிசி’யாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.,க்களை வைத்திருந்தும், மாம்பழ விவசாயிகளுக்காக தி.மு.க., குரல் கொடுக்கவில்லை.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட தி.மு.க., அரசிடம், விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்நிலையில், கர்நாடக மாநில மாம்பழ விவசாயிகளுக்கு, பி.டி.பி.எஸ்., எனப்படும் விலை பற்றாக்குறை செலுத்தும் திட்டத்தின்படி, மத்திய அரசு இழப்பீடு அறிவித்துஉள்ளது.

விவசாயிகள் நலன்காக்கும் நோக்கில், பிரதமர் மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இத்தகைய இழப்பீட்டை தமிழக விவசாயிகளுக்கும் மத்திய – மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்த இழப்பீடு, ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் மாம்பழங்களுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், துயரில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அ.தி.மு.க., என்றென்றும் விவசாயிகளுடன் துணை நிற்கும்; அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை கண்டித்தும், வரும் 30ம் தேதி காலை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

நியாயமான கொள்முதல் விலை தேவை – சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “ஆந்திர மாநிலம் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாத்தது போல், தமிழக அரசும் அதேபோல் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், மாநிலத்தில் உள்ள ஜூஸ் ஆலைகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version