IRCTC கணக்குடன் ஆதார் எண் கட்டாய இணைப்பு : ஜூலை 1 முதல் நடைமுறை அமலில் !

தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது இந்திய ரயில்வே பயணிகளுக்கிடையே மிகவும் பரபரப்பான ஒன்றாகவே மாறியுள்ளது. அதிலும், அவசரமாக பயணிக்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளவர்களுக்கு தட்கல் டிக்கெட் என்பது ஒரே வரம். இருப்பினும், தற்போதைய சூழலில் இந்தத் தட்கல் முன்பதிவு முறையே பலருக்கு சிக்கலாக மாறி வருகிறது.

பல்வேறு முறைகளிலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கிற பயணிகள், இணையதளப் பழுதுகள், சர்வர் சிக்கல்கள், டிக்கெட் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளால் வருத்தமடைகிறார்கள். சில விநாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீரும் நிலை உருவாகியுள்ளது. சமீபத்திய ஆய்வொன்றின்படி, கடந்த ஆண்டுகளில் 85% வரை வாய்ப்பு இருந்த தட்கல் முன்பதிவுகள், தற்போது வெறும் 1.5% மட்டுமே கிடைக்கிறது என்பது பெரும் அதிர்ச்சி.

இதன் காரணமாக, ரயில்வே துறை அதிரடியாக செயல்பட்டு, நாடு முழுவதும் 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளது. மேலும், 70 லட்சம் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

இந்த மோசடிகளை தடுக்க புதிய பாதுகாப்பு நடைமுறை ஒன்றை IRCTC நிறுவ விரைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக IRCTC கணக்குடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முறையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP மூலம் பயணியின் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பிறகே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பயணிகள் மற்றும் நடைமுறையை தவறாக பயன்படுத்துவோருக்கு இடையே தெளிவான வேறுபாடு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version