மதுரை : பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை – 3 பேர் மீது போலீசார் விசாரணை

மதுரை :
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜய் பிரசன்னா என்பவர், இன்று காலை தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மீது தாக்குதல், திருட்டு, கொலை உள்ளிட்ட சுமார் 12 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து கரிமேடு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, அஜய் பிரசன்னாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையடுத்து மேற்கொண்ட போலீசார் விசாரணையில், நேற்று நள்ளிரவு ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழக்கடை சுந்தர் (38) என்பவரது வீட்டில் அஜய் பிரசன்னா மற்றும் சிலர் மது அருந்திய நிலையில் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தகராறை தொடர்ந்து, பழக்கடை சுந்தர், அவரது சகோதரர் தொத்தா சுந்தர் (36) மற்றும் பாண்டியராஜன் (26) ஆகியோர் சேர்ந்து அஜய் பிரசன்னாவை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த மூவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version