மதுரை :
அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் நேற்று மாலை ஒருவித அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
அரசுப் பேருந்து ஒன்றில், பள்ளி நேரத்தில், மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக தொங்கிக் கொண்டே பயணித்தனர். இந்த நேரத்தில், அந்த பேருந்தில் தொங்கிக் கொண்டிருந்த மாணவரில் ஒருவர் மீது தவறுதலாக ஒரு ஷேர் ஆட்டோ உரசியது. இதனால் நிலைதடுமாறிய மாணவர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேருந்துகளில் மாணவர்கள் புட் போர்டு, ஜன்னல்கள், படிக்கட்டுகளில் தொங்கும் பிழைபாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பள்ளி நேரங்களில் மாணவர்கள் பேருந்துகளில் அதிக அளவில் படித்து செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், காலையிலும் மாலையிலும் பள்ளி நேரங்களில் அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மதுரை அரசு போக்குவரத்துக் கழகம், புதூர் கிளை மேலாளர் கரிகாலன் கூறுகையில் :
“எங்களது டிப்போவில் இருந்து தெப்பக்குளம் – மாட்டுத்தாவணி வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற டிப்போக்களிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கூடுதலாக பேருந்துகளை இயக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். இந்த வகையான சம்பவங்கள் மறுபடியும் நிகழாத வகையில், அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.