கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், பிரபல கால்பந்து வீரர் மைக்கேல் ஓவனைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். ஜியோஸ்டாருடன் நடைபெற்ற சிறப்பு உரையாடலில், லிவர்பூல் ரசிகரான சஞ்சு சாம்சன், இந்தியாவில் வளர்ந்து வரும் கால்பந்து கலாச்சாரம் குறித்து பேசினார்.
லிவர்பூலும் மான்செஸ்டர் யுனைட்டெடும் ஆகிய அணிகளுக்காக விளையாடிய பிரிமியர் லீக் நாயகன் மைக்கேல் ஓவனுடன் இணைந்து பணிபுரிவதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சஞ்சு, “என் அப்பாவே மைக்கேல் ஓவனின் மிகப்பெரிய ரசிகர். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். மைக்கேல் ஓவன் மும்பை மைதானத்தில் விளையாடப் போவதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்,” எனக் கூறினார்.
மேலும், “இந்தியாவில் கால்பந்துக்கான ஆர்வம் அடிக்கடி குறைவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் பல ரசிகர்கள் அதற்காக பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர். மலப்புரம் FC அணியின் பங்குதாரராக இருக்கும் நான் அங்கே ஒரு ஆட்டத்தை பார்த்தபோது 30,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியிருந்தனர். அது இந்தியாவில் கால்பந்து எவ்வளவு பிரபலமடைந்துள்ளது என்பதை காட்டுகிறது,” என்றார்.
கேரளா ரசிகர்களின் உற்சாகத்தை எடுத்துக்கூறிய சஞ்சு சாம்சன், “மைக்கேலை கோச்சிக்கு அழைத்திருக்கிறேன். அவர் அங்கு வந்து கால்பந்தை மேலும் அனுபவிக்கட்டும். நாங்கள் அவரை சாதமும் மீன் குழம்பும் வைத்து வரவேற்போம்,” என கலகலப்பாக கூறினார்.
மேலும், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த சஞ்சு, “நாங்கள் டெல்லியில் போலீஸ் தலைமையகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் உட்கார்ந்திருப்போம். அப்பா வந்து ‘இன்று இரவு மைக்கேல் ஓவன் விளையாடப் போகிறார், பார்ப்போமா?’ என்று கேட்பார். இன்று அவருடன் இணைந்து பணிபுரிவது உண்மையிலேயே அதிசயம்,” என தெரிவித்தார்.