இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலத்தைக் கைப்பற்றும் நோக்கில், கூலிப்படை கும்பல் ஒன்று ஜே.சி.பி இயந்திரம் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி புகுந்து 1100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டிச் சாய்த்ததோடு, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பெருநாழி கிராமத்தின் சர்வே எண் 28/3 கொண்ட நிலம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஏ.செந்தூர்பாண்டியன் தரப்பினருக்கும் இடையே முதுகுளத்தூர் சிவில் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் (O.S. No: 17/2019) வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், நீதிமன்ற உத்தரவுகளையும் சட்டத்தையும் கிஞ்சிற்றும் மதிக்காமல் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி, பெருநாழி பி.கே.எம் மஹால் வளாகத்தில் அமைந்துள்ள செழிப்பான வாழைத் தோட்டத்திற்குள், செந்தூர் பாண்டியன் மற்றும் மாரிமுத்து பாண்டியன் ஆகியோரால் ஏவிவிடப்பட்ட ஒரு கும்பல், டி.என் 65 ஏ.ஒய் 7660 என்ற பதிவெண் கொண்ட ஜே.சி.பி இயந்திரத்துடன் கையில் அரிவாள்களை ஏந்தியபடி அதிரடியாகப் புகுந்தது. அக்கும்பல் ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு தோட்டத்தின் பாதுகாப்பு முள்வேலிகளை இடித்துத் தள்ளியதுடன், பாசனத்திற்கான மின் இணைப்புகள் மற்றும் அங்கிருந்த 4 சி.சி.டி.வி கேமராக்களைத் அடித்து உடைத்துத் துவம்சம் செய்தது. பின்னர், அறுவடைக்குத் தயாராக இருந்த காய்கள் மற்றும் பூக்களுடன் கூடிய சுமார் 1100 வாழை மரங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்த்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதத்தை விளைவித்தனர்.
தோட்டத்தில் நிகழ்ந்த அழிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த 33 வயது நந்தினி, அவரது தாய் மற்றும் தம்பி, தங்கைகள் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் நந்தினியையும், அவரது தம்பி செந்தில் ஈஸ்வரனையும் அக்கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. “உங்களை வெட்டிக் கொலை செய்தால்தான் இந்தச் சொத்தைக் கைப்பற்ற முடியும்” எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த அக்கும்பல், ஜே.சி.பி இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில், பெருநாழி காவல் துறையினர் குற்ற எண் 06/2026-ன் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 189(2), 329(3), 324(4), 115(2), 351(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் செந்தூர் பாண்டியன், மாரிமுத்து பாண்டியன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் நில மோசடி மற்றும் முத்திரைத்தாள் மோசடி உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட இந்த நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















