பெங்களூரு :
18வது ஐபிஎல் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணிக்காக ஜூன் 4 ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் இந்த வெற்றிக் கொண்டாட்டம் பரிதாபமாக முடிந்தது.
அன்றைய தினம் ஆர்சிபி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் மைதானத்துக்குள் வருவதற்குள், கேட்-6 அருகே பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதனால் 11 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நாட்டை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா உள்ளிட்ட 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆர்சிபி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனம் சார்ந்த சுனில், கிரண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற விசாரணை – 9 கேள்விகள்
இந்த கோரச் சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு செய்து, ஜூன் 5 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதில் மாநில அரசுக்கு 9 முக்கியமான கேள்விகளை எழுப்பி, பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.
அந்த 9 கேள்விகள்:
- கொண்டாட்டம் நடத்த யார் முடிவு செய்தனர்?
- போக்குவரத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை?
- கூட்டத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்தினீர்கள்?
- மருத்துவ வசதிகள் என்ன?
- மக்கள் எண்ணிக்கை முன்கூட்டியே கணிக்கபட்டதா?
- காயம் அடைந்தவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதா?
- மருத்துவமனைக்கு எவ்வளவு நேரத்தில் கொண்டு செல்லப்பட்டனர்?
- 50,000-க்கும் மேற்பட்டோர் கூடும் நிகழ்வுகளை நிர்வகிக்க வழிகாட்டுதல்கள் உள்ளதா?
- நிகழ்ச்சி நடத்த எப்போது அனுமதி கோரப்பட்டது?
“அனுமதி இல்லை – ஆர்சிபி தான் பொறுப்பு” என அரசு குற்றச்சாட்டு
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த கர்நாடக அரசு, “இந்த நிகழ்வுக்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால் RCB, உலகமெங்கும் உள்ள ரசிகர்களை அழைத்தது, எனவே இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தான் முழுமையான பொறுப்பும், விளைவுகளுக்கான காரணமும்” என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், அரசு தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய அட்வகேட் ஜெனரல் சஷிகிரண் ஷெட்டி, “RCB மற்றும் BCCI இடையே விழா பாதுகாப்பு, டிக்கெட் கட்டுப்பாடு, நுழைவு அனுமதிகள் குறித்த ஒப்பந்தம் இருந்தது. ஆகவே, BCCI-க்கும் பொறுப்பு உண்டு” என தெரிவித்தார்.
“அனுமதி கேட்டதே இல்லை!” – அரசின் கடும் பேச்சு
RCB மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஜூன் 3 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மட்டும் ஒரு கடிதம் அனுப்பியதாக அரசு கூறியுள்ளது. அதில், வெற்றிக்கொண்டாட்டம் நடைபெறும் என்று ‘தகவல்’ அளிக்கப்பட்டது மட்டுமே. அனுமதி கோரப்படவில்லை.
“அவர்கள் திட்டமிட்டதை செய்துவிட்டார்கள். எந்த அனுமதியும் கேட்கவில்லை. மாறாக, சமூக வலைதளங்களில் ‘உலக ரசிகர்கள் அனைவரும் வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்தனர். 33,000 பேருக்கான மைதானத்தில் சுமார் 4 லட்சம் பேர் வந்ததுதான் இந்த கோர நிலைமைக்கு காரணம்” என அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.