தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநில பார்லிமென்ட் குழுத் தலைவர், எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
தமிழகத்துக்கான நிதியை விரைவாக விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பு குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பதிவில் தெரிவித்துள்ளார்:
“தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2025-26 நிதியாண்டிற்கான திட்டங்களில், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4,500 கோடி, மேலும் மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்காக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை இன்று நான், பார்லி குழுத் தலைவர் கனிமொழியுடன் இணைந்து, மத்திய நிதியமைச்சரிடம் வழங்கினோம். விரைவில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு நடைபெறுமாறு கேட்டுக்கொண்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.