திருப்பரங்குன்றம் தீபத்தூண் பழமை குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரித் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டபோது, “தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் திருப்பரங்குன்றம் பகுதியில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; மேலும், இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியது. “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும், தொடக்க நிலையிலேயே நீதிபதியும் நீதிமன்ற அவமதிப்பு நடந்துவிட்டதாக முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. தனி நீதிபதி விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்” என்றும் அரசுத் தரப்பு தங்கள் வாதத்தில் வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில், தர்கா தரப்பினர் மேல்முறையீடு செய்யப் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு தங்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், இந்த விவகாரத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து முக்கிய கேள்வியை எழுப்பினர். “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள அந்தத் தீபத்தூண், கோயிலைக் காட்டிலும் பழமையானது அல்லவா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது, தற்போது நிலவும் நிர்வாகச் சிக்கல்களைத் தாண்டி, அந்தத் தூணின் வரலாற்று மற்றும் மதரீதியான பழமையையும் அதன் முக்கியத்துவத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்வதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விதிமுறைகள் மீறப்பட்டதாக அரசுத் தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனி நீதிபதியின் உத்தரவு சட்டப்படி செல்லுமா, அதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா, மற்றும் வரலாற்று மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டுமா போன்ற பல்வேறு அம்சங்களை நீதிபதிகள் அமர்வு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறது.

Exit mobile version