ஈரானை அணு ஆயுதங்களை நோக்கி தள்ளுகிறதா இஸ்ரேல் ?

மத்திய கிழக்கு தீவிரமான பதற்றத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரம் அடைந்து, அதுவே ஒரு முழுமையான போர் நிலையை உருவாக்கியுள்ளது. இது வழக்கமான நாடுகளுக்கிடையிலான சண்டைகளல்ல; உலக அமைதிக்கு நேரடியாக அச்சுறுத்தும் அளவுக்குள் இந்நிலை மாறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிலும் பொதுமக்களே 90% வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வருத்தகரமானது. உலக நாடுகள் பல, இந்த நெருக்கடியை சமாளிக்க முயற்சி செய்து வருகின்றன.

மத்தியஸ்தம் செய்ய ரஷ்யா முன்வருகிறதா ?

இஸ்ரேல்-ஈரான் இடையிலான பகைமையை சமாதானமாக முடிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “பேச்சுவார்த்தையின் மூலமே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்” எனக் கூறினார்.

அதுமட்டுமன்றி, ஈரானில் தயாரிக்கப்படும் யுரேனியத்தை அணுமின் உற்பத்திக்காக மாற்றும் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவளிக்கத் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிக்கக்கூடியது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதம் தவிர மாற்று வழியில்லை எனும் ஈரானின் நிலைப்பாடு

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால் ஈரானின் முக்கிய அமைப்புகள், விஞ்ஞானிகள், இராணுவ தலைவர்கள் உள்ளிட்டோர் பலியான நிலையில், அணு ஆயுதமே எதிர்கால பாதுகாப்பிற்கான ஒரே வழி என ஈரான் கருதுகிறது. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்றக் குழுக்களும் பலவீனமடைந்துள்ளதால், ஈரான் தனது போர் உத்தியில் மாற்றங்களை செய்யத் தயார் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலின் பதிலடி, ஈரானின் எதிர்வினை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “தெஹ்ரானின் வான்பரப்பை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். ஈரானின் இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்” என அறிவித்துள்ளார். மேலும், அணு ஆயுத ஆபத்தை முற்றிலும் அழிக்கவே இஸ்ரேலின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேசமயம், ஈரான் அணு ஆயுத முயற்சியில் மேலும் தீவிரம் காட்டும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அணு ஒப்பந்தத்திலிருந்து விலகும் ஈரான் ?

1968-ம் ஆண்டு உருவான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) ஈரான் விலகும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்து, ஈரானின் வெளியுறவுத்துறைத் துறைபேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், நாடாளுமன்றம் முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்றுப் பின்புலம்: 1981 ஓசிராக் தாக்குதல்

1981-ம் ஆண்டு, ஈராக் நாட்டின் ஓசிராக் அணு உலையை இஸ்ரேல் F-16 விமானங்களால் தாக்கியது. அதன் பின்னர் ஈராக், அதிகமாக அணு ஆயுத வளர்ச்சியில் ஈடுபட்டது. இது போலவே இஸ்ரேலின் தாக்குதல் ஈரானை விரைவாக அணு ஆயுதங்களை நோக்கி தள்ளும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கின்றனர்.

தீர்மானிக்கப்படாத நெருக்கடி

இது வெறும் ஈரான்–இஸ்ரேல் இடையிலான போரல்ல… இது உலக அரசியலின் திசையை மாற்றக்கூடிய ஒரு நெருக்கடி. வளைகுடா நாடுகள், ஐக்கிய நாடுகள், சபை நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் தங்களது நிலைப்பாடுகளை பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

Exit mobile version