பாமகவில் கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை அதிகாரம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வந்த சூழலில், அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இப்படியான நிலையில், திருவள்ளூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, தனது தவறுகளை மன்னித்துக் கொள்ளுமாறும், தங்களின் கட்டளையின்படி நடக்கப் போவதாகவும் அன்புமணி உருக்கத்துடன் பேசியிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக பாமகவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தான் நியமிக்கும் நிர்வாகிகள், பொறுப்பாளர்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என ராமதாஸ் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே இன்னும் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லையோ என கேள்வி எழுந்த சூழலில், இரு தலைவர்களும் சேர்ந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும், அதுதான் கட்சிக்கு பலமாகவும், தேர்தலுக்கு பயனுள்ளதாகவும் இருக்குமென அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைக்கு ராமதாசோ அல்லது தானோ காரணம் இல்லை என்றும், அதற்கு திமுகவே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
கூட்டத்தில் பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்டது. இந்த பயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் வந்துவிட்டது. இந்த பயம் வந்தபின் நமது கட்சியை பலவீனப்படுத்த சூழ்ச்சிகளை செய்கிறார்கள். கட்சிக்குள் நடக்கும் குழப்பத்திற்கு மருத்துவர் ராமதாஸோ, நானோ காரணமல்ல. இதற்கு திமுக மட்டுமே வில்லன்” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், பாமகவிற்குள் நிலவும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் சூழலில், கூட்டணி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ராமதாஸ், அன்புமணி இடையே நடக்கவிருக்கும் சந்திப்பே இதற்கு தீர்வை கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.