2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதற்கிடையில், சில சட்ட மாணவர்கள் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற கூடாது என்று பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுவில், இத்தகைய போட்டி நடப்பது தேசிய நலனுக்கு எதிராகவும், முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் தலைமையில் நடைபெற்ற அமர்வில், “இது ஒரு போட்டி மட்டுமே. ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள நிலையில், இப்போது என்ன செய்ய முடியும்? போட்டி தொடர்ந்து நடக்க வேண்டும்” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
2025 ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. போட்டி துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற உள்ளது.













