ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.
கான்பெர்ராவில் நடைபெற்ற முதலாவது போட்டி மழையால் முடிவுக்கு வராமல் போனது. தொடர்ந்து, மெல்போர்னில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன்பின் கான்பெர்ராவில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது. கோல்ட்கோஸ்டில் நடந்த நான்காவது ஆட்டத்திலும் இந்தியா சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து, 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், தொடர் முடிவை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடரை கைப்பற்ற முயலும் நிலையில், ஆஸ்திரேலியா சமனைக் காண உற்சாகமாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகக் கருதப்படுகின்றது. எனினும், நிதானமாக ஆடும் பேட்ஸ்மேன்கள் ரன்களை எளிதில் சேர்க்கலாம். இதேசமயம், அங்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது.


















