இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய இளம்படை வீரர்கள் அபாரமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து இந்தியா 471 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் சதமடித்து, 364 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்த நிலையில், 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்து விக்கெட் இழப்பில்லாமல் 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியின் மூன்றாவது நாளில், 61வது ஓவரில் ஹாரி புரூக் முகமது சிராஜ் வீசிய பந்தை ஸ்லிப் பகுதியில் அடித்தார். பந்து பவுண்டரிக்குச் சென்றதையடுத்து, ரிஷப் பண்ட் பந்தின் வடிவம் மாறியுள்ளதாகக் கூறி நடுவரிடம் புதிய பந்து வழங்குமாறு கோரினார். எனினும், பந்தை பரிசோதித்த நடுவர், பந்தை மாற்ற தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த ரிஷப் பண்ட், பந்தை வேகமாகத் தூக்கி எறிந்தார். பந்து நடுவரை தாக்கவில்லை என்றாலும், அவரது இந்த நடவடிக்கை ஐசிசியின் போட்டி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ரிஷப் பண்ட் ஐசிசி நடத்தை விதிகளில் நிலை 1 விதியை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிசியின் விதி 2.8 – நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயல்கள் – என்பதற்குரிய குற்றம் பண்ட் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ட், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் பரிந்துரைத்த தண்டனையை ஏற்றுக் கொண்டதால், அவர்மீது ஒழுக்க நடவடிக்கை நடத்தப்படவில்லை. எனினும், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.
இது பண்ட் கடந்த 24 மாதங்களில் பெற்ற முதல் குற்றமாகும். நிலை 1 விதி மீறல்களுக்கு, அதிகாரப்பூர்வ கண்டனம் அல்லது அதிகபட்சமாக போட்டிக்கான சம்பளத்தில் 50% அபராதம் மற்றும் 1 அல்லது 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட முடியும். ஒரே வீரர், 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால், அவை தடை புள்ளிகளாக மாறி, போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.