தூத்துக்குடியில் மாபெரும் தொழில் கடன் முகாம் கடன் ஆணைகளை வழங்கினார் ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்புத் தொழில் கடன் முகாம் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கி நடத்திய இந்த முகாமில், புதிய தொழில் தொடங்குபவர்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்துபவர்களுக்கு அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த முகாமின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 16.03 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சுயதொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காகவும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் இத்தகைய மாபெரும் கடன் உதவிகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட தொழில் மையத்தின் இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் மற்றும் முக்கிய வங்கி அதிகாரிகள் உடன் இருந்தனர். கடன் பெற்ற பயனாளிகள் அரசின் மானியங்களைப் பயன்படுத்தித் தொழிலை முறையாகத் தரம் உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த முகாம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

Exit mobile version