கோவை மாவட்டத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு பழம்பெரும் முருகன் திருக்கோயில்களில் பக்திப் பெருக்குடன் திருவிழாக்கள் நடைபெற்றன. இந்த ஆன்மீக நிகழ்வுகளில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்ததோடு பக்தர்களுக்கான பல்வேறு புதிய வசதிகளையும் தொடங்கி வைத்தார். தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில், கோவை சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அன்னூர் மன்னீஸ்வர சுவாமி கோயில் ஆகிய நான்கு முக்கியத் தலங்களில் நடைபெற்ற தைப்பூச நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
முன்னதாக, சூலூர் வட்டம் தென்சேரிமலையில் உள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் நீண்ட காலக் கோரிக்கையான புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் இணைந்து நட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, உபயதாரர்களால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் தேக்கு மரத்தில் தயாரிக்கப்பட்டு, தங்கம் பூசப்பட்ட பிரம்மாண்ட தங்கத் தேரைத் திருக்கோயில் சார்பில் முறைப்படி பெற்றுக்கொள்ளும் நிகழ்விலும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கோவை மாநகர் சுக்கிரவார்பேட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட 1603 சதுர அடி (3.67 சென்ட்) நிலத்தில், தொலைதூரத்திலிருந்து வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்கான நவீன மண்டபத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். மேலும், முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வர ஏதுவாகப் புதிய மின் தூக்கி (Lift) வசதியையும் அவர் தொடங்கி வைத்தார். இறுதியாக, அன்னூர் மன்னீஸ்வர சுவாமி கோயிலில் உபயதாரர்கள் வழங்கிய மற்றொரு கலைநயம் மிக்க தங்கத் தேரையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இந்தத் தொடர் நிகழ்ச்சிகளின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதரன், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் வெற்றிச்செல்வன், கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் விமலா, மருதமலை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், தக்கர் ஜெயக்குமார் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த இந்தத் தைப்பூசத் திருவிழாவில், அரசு சார்பில் செய்யப்பட்டிருந்த சிறப்பு வசதிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.














