ஜெயலலிதாவுக்கு தம்பி போலவே அரசியல் களத்தில் பணியாற்றினேன் – திருமாவளவன் அதிரடி பேச்சு

“ஜெயலலிதாவுக்கு தம்பி போல அரசியல் களத்தில் பணியாற்றியவன் நான்தான். அதை அ.தி.மு.க. தலைவர்கள் நன்கு அறிந்தவர்கள். ஆனால் இ.பி.எஸ். மட்டும் அதை அறியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:

“அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நான் வெளியேறியபோது, என்னை ‘தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருடன் எனக்கு இருந்த உறவை அ.தி.மு.க. தலைவர்கள் மறக்க முடியாது. இ.பி.எஸ். மட்டும் அதை அறியாமல் இருப்பது விசித்திரமாக உள்ளது.”

அணிகள் தொடர்பில் விளக்கம்

“அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டும் என்று நான் எங்கும் கூறியதில்லை. அன்வர் ராஜா பேசிய கருத்துக்கு பதிலாக, அந்த இரண்டு கட்சிகளும் இணக்கத்தில் இல்லை என்பதையே உணர்த்திக் கூறினேன்.”

அ.தி.மு.க. வலுவாக இருக்க வேண்டும்

“அ.தி.மு.க. இங்கு வலுவாக இருந்தால், பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியாது. அது என் ஆசையாக அல்ல. ஆனால், திராவிட இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே எனது நல்லெண்ணம்.”

பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு

“பா.ஜ.க. காலூன்றிய இடங்களில் மக்களை மதம், ஜாதி என பிளவுபடுத்தியுள்ளதை இந்த நாடு முழுவதும் மக்கள் அறிவார்கள். அடிப்படை வசதிக்காக போராடாதவர்கள், எளிய மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள், மக்களை பிளவுபடுத்துவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.”

இ.பி.எஸ்.க்கு எச்சரிக்கை

“நான் யார் என்பதை ஜெயலலிதா அறிவார், அ.தி.மு.க. தொண்டர்களும் அறிவார்கள். இ.பி.எஸ். மட்டும் அதை அறியாமல் இருக்கிறார் என்றே நம்ப முடியவில்லை. பா.ஜ.க.வால் அ.தி.மு.க.க்கு ஏற்படக்கூடிய பாதிப்பை உணராமல் இருப்பது தான் கவலையான விஷயம்” என தெரிவித்தார்.

Exit mobile version