மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

கர்னூல் (ஆந்திரா):
மேகாலயாவில் தேனிலவுப் பயணத்தின் போதே கணவரைக் கொன்ற சோனம் ரகுவன்ஷியின் பரபரப்பான கொலை வழக்குக்குப் பிறகு, இப்போது ஆந்திராவிலும் அதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூலைச் சேர்ந்த தேஜேஸ்வர் என்பவர், தனியார் நில அளவையாளர் மற்றும் நடன ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த மே 18ஆம் தேதி, அவர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார். ஆனால், திருமணமாகி மட்டும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தேஜேஸ்வர் ஜூன் 17ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணை நடந்து வந்த நிலையில், தேஜேஸ்வரின் உடல் ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன் ஒரு வங்கி ஊழியருடன் காதலுற்றிருந்தது தெரியவந்தது. அதே நேரத்தில், தேஜேஸ்வரையும் காதலித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரியில் திருமண திட்டமிடப்பட்டிருந்த போதும், ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் திரும்பிய பிறகு, மீண்டும் தேஜேஸ்வருடன் திருமணம் செய்ய தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாராம்.

தேஜேஸ்வரின் குடும்பத்தினர், “ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய வேண்டாம்” என எச்சரித்தும், அவர் கல்யாணத்திற்கு முனைந்துள்ளார். தற்போது, தேஜேஸ்வரின் மரணத்தில் ஐஸ்வர்யா மற்றும் அவரது தாயார் சுஜாதாவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version