வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில், சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக, 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வழங்கப்பட்டன. அதனை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், சுமார் 97 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறந்தவர்கள், கண்டு பிடிக்கப்பட முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள், நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், இரட்டை பதிவுகள் என்று மொத்தம் 97 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் 14 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்ப படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18ந்தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியாகும்.

















