2026-ல் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்ற மிக முக்கிய தீர்மானத்தை மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் இன்று நடைபெற்றது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி, தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மதிமுக மீண்டும் பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றுப் போட்டியிட வேண்டும் என்றும், மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.