நாகர்கோவில் அருகே 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவி, கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்று வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டதால், மனமுடைந்த கணவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த வடக்கு சூரங்குடி வள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (34). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜிதா (32) என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட காலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தம்பதியிடையே கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் மனக்கசப்பு முற்றிய நிலையில், அஜிதா தனது கணவரைப் பிரிந்து சென்றார்.
இந்த நிலையில், கணவரைப் பிரிந்து சென்ற அஜிதா, வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டு தனியாகக் குடும்பம் நடத்தி வருவதாகக் கதிரவனுக்குத் தெரியவந்தது. தன்னுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்த மனைவி, சட்டப்பூர்வமான பிரிவினைக்கு முன்னரே மற்றொருவரை மணம் முடித்ததை அறிந்த கதிரவன், கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். யாரிடமும் சரியாகப் பேசாமல் விரக்தியில் காணப்பட்ட அவர், சம்பவத்தன்று இரவு தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு யாரும் இல்லாத நேரத்தில் கதிரவன் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு வாரிக் கொண்டிருப்பதைக்கண்ட உறவினர்கள், பதறிப்போய் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கதிரவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், கதிரவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியிடையே ஏற்பட்ட பிணக்கிற்கான உண்மையான காரணம் என்ன? அஜிதாவின் இரண்டாவது திருமணம் சட்டப்படி நடந்ததா? அல்லது இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதேனும் தூண்டுதல்கள் இருந்ததா? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியின் வாழ்க்கை இத்தகைய சோகத்தில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
















