கணவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை…

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்துவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்கு சென்று பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியையின் செயல், தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கர்னூல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட் நகரில் உள்ள மாருதி காலனியை சேர்ந்தவர் லக்ஷ்மன்நாயக் (38). இவரது மனைவி பத்மா (30), அருகிலுள்ள பட்டுகாடிப்பள்ளிதாண்டா தொடக்கப்பள்ளியில் அரசு ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, தடூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் கோபி (40) என்பவருடன் பத்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். ஆரம்பத்தில் நட்பாக இருந்த பழக்கம், பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் கணவர் லக்ஷ்மன்நாயக்கிற்கு தெரியவந்ததையடுத்து, வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் பலமுறை எச்சரித்தும், பத்மா அந்த உறவை நிறுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், காதலுக்கு கணவரே தடையாக இருப்பதாக கருதி, அவரை கொலை செய்யும் முடிவை பத்மா எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு கள்ளக்காதலன் கோபியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மன்நாயக்கின் முகத்தில் துணியை வைத்து, பத்மா மற்றும் கோபி இருவரும் சேர்ந்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தியுள்ளனர். இதில், லக்ஷ்மன்நாயக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்த பின், கோபி அமைதியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அதிர்ச்சியளிக்கும் வகையில், மறுநாள் காலை பத்மா குளித்து, தயாராகி, வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் இருந்தபடியே, வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி செய்து, “என் கணவருக்கு உடல்நலம் சரியில்லை… போன் எடுத்துக்கொள்ளவில்லை” என அழுதபடி கூறியுள்ளார். இதற்கிடையே, பள்ளியிலேயே “என் கணவர் இறந்துவிட்டார்” என பத்மா கதறி அழுததாக கூறப்படுகிறது. இதனால், சக ஆசிரியர்கள் அனைவரும் அவரது நடிப்பை உண்மை என நம்பியுள்ளனர்.

ஆனால், லக்ஷ்மன்நாயக்கின் தம்பிக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை தீவிரமடைந்தது. விசாரணையின் போது, பத்மா குற்றத்தை ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பத்மா மற்றும் கோபி இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர்கள் என்ற பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள், இப்படியொரு கொடூர குற்றத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version