மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு அனைத்தும் செய்கிறது – நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்காக, அரசு முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா (36), ஏமனில் நர்சாக பணியாற்றி வந்தவர். அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கிளினிக்கில் வேலை பார்த்தபோது, அவர் தொடர்ந்த தொல்லைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு தலால் அவரிடம் பாஸ்போர்ட்டை பறித்து வைத்ததாகவும், அதை மீட்டெடுக்க அவர் மயக்க மருந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மருந்தளவு அதிகமாக காரணமாக, தலால் உயிரிழந்தார்.

இதையடுத்து, ஏமன் நீதிமன்றம் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவருக்கு ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என திட்டமிடப்பட்டது. இந்தியா சார்பில் முஸ்லிம் மத குரு ஒருவர் தலாலின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அந்த தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 18) சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகிய சட்டத்துறை அதிகாரி வெங்கடரமணி, “ஏமனில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய அதிகாரிகள் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,” என்றார்.

இதையடுத்து, “நிமிஷா பிரியாவை காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், வழக்கின் தொடர்ச்சி விசாரணை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version