ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ், ‘இலக்கு 2030’ உத்திகள் மற்றும் தொலைநோக்குச் செயல் திட்டங்கள் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான முக்கியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில், கோபிசெட்டிபாளையம் ஆல் ட்ரேடர்ஸ் அசோசியேஷன் (All Traders Association) தலைவர் ஜி.எஸ்.வேலுமணி கலந்துகொண்டு, தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோரிடம் கோபி நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை வழங்கினார்.
அந்த மனுவில், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையை உடனடியாகப் பல்நோக்கு மருத்துவமனையாக (Multi-specialty Hospital) தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், அஞ்சியோ மற்றும் டயாலிசிஸ் போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்தி, நரம்பியல் மற்றும் இருதயத் துறைக்கான சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், யோகா மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகர்களின் நலன் சார்ந்து, நல வாரியங்களைச் சீரமைப்பதுடன், அரசுத் திட்டங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், வர்த்தக உரிமம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ (MSME) துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அதிகாரிகள் வணிகப் பிரதிநிதிகளை அழைத்து அடிக்கடி கருத்தரங்குகளை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
நகரின் அடிப்படை வசதிகள் குறித்துப் பேசுகையில், கோபி நகராட்சியில் தற்போது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும் குடிநீரை, தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீர் வீணாவதைத் தடுக்க வீடுகளில் ‘ப்ளோட்’ (Float) பொருத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா, பல்நோக்கு வணிக வளாகம், நகரின் மத்தியில் தீயணைப்பு நிலையம் மற்றும் பிரம்மாண்ட விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தப்படும் 6 சதவீத வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியை மாநகராட்சியாக (Corporation) தரம் உயர்த்த வேண்டும் என்றும் பலமான கோரிக்கை வைக்கப்பட்டது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தக் கொடிவேரி அணையைப் நவீனப்படுத்த வேண்டும் மற்றும் கோபியிலிருந்து நேரடிப் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த முக்கிய நிகழ்வில், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கோபிசெட்டிபாளையம் ஆல் ட்ரேடர்ஸ் அசோசியேஷன் உறுப்பினரும் குப்தா ஜூவல்லரி உரிமையாளருமான மணிவண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கோபி நகரின் வளர்ச்சிக்கான இந்த ஆக்கப்பூர்வமான கோரிக்கைகள் ‘இலக்கு 2030’ திட்டத்தில் சேர்க்கப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

















