“ஆசை காட்டி மோசம் செய்த ‘தங்க’க் கும்பல்”: 15 லட்சத்தைப் பறித்த வடமாநில இளைஞர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வரும் நடராஜ் – யசோதா தம்பதியினரை குறிவைத்து, சினிமா பாணியில் அரங்கேறிய நூதன தங்க நகை மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் நடராஜின் உணவகத்திற்குத் தனது தாய் மற்றும் தம்பியுடன் வாடிக்கையாளராக வரத் தொடங்கிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த சங்கர் என்பவர், உணவக உரிமையாளர் யசோதாவிடம் மிகுந்த அன்போடும், சரளமான தமிழிலும் பேசி நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தான் ஒரு சாலைப் பணியாளர் என்றும், பெங்களூருவில் வேலை செய்தபோது தற்செயலாக 30 பவுன் தங்க நகைகளைக் கண்டெடுத்ததாகவும் கூறி யசோதாவை நம்ப வைத்துள்ளார். தனது தாயின் மருத்துவச் செலவு மற்றும் தங்கையின் திருமணத்திற்காக அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், தான் ஒரு பிற மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நகையை விற்கப் பயமாக இருப்பதாகவும் கூறி, 30 பவுன் நகையை வெறும் 15 லட்ச ரூபாய்க்குத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, சங்கர் முதலில் யசோதாவிடம் சில தங்கக் குண்டுகளை மாதிரியாகக் கொடுத்துப் பரிசோதிக்கச் சொல்லியுள்ளார். கடந்த 10-ம் தேதி யசோதா அந்த மாதிரிகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் சோதித்தபோது, அது 916 தரமுள்ள உண்மையான தங்கம் எனத் தெரியவந்தது. இதனால் சங்கரின் பேச்சை முழுமையாக நம்பிய யசோதா, தனது மகளின் நகைகளை அடகு வைத்தும், சீட்டுப் பணத்தை எடுத்தும் 15 லட்ச ரூபாயைத் தயார் செய்துள்ளார். கடந்த 20-ம் தேதியன்று அவிநாசி தேர்நிலை அருகே வரவழைக்கப்பட்ட யசோதா மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் பணத்தைக் கொடுத்து விட்டு 30 பவுன் நகையைப் பெற்றுச் சென்றனர். ஆனால், வீட்டுக்குத் திரும்பிய பின் சங்கரின் செல்போன் அணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்து நகைகளைச் சோதித்தபோது, அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்து யசோதா குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.

பாதிக்கப்பட்ட யசோதா கடந்த 22-ம் தேதி அவிநாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்கர் என்ற பெயரில் மோசடி செய்தது மகாராஷ்டிராவைச் சேர்ந்த கன்சாம் (28) என்பதும், தம்பியாக நடித்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த டெவிலால் கைரா (34) என்பதும் தெரியவந்தது. சத்தியமங்கலத்தில் மறைந்திருந்த இவர்கள், பணத்துடன் கர்நாடகாவிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவிநாசி போலீசார் அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மோசடி நடந்த சில நாட்களிலேயே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துப் பணத்தை மீட்ட அவிநாசி போலீசாரின் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Exit mobile version