நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவ வல்லுநர்கள், 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 76 வயது முதியவர் ஒருவருக்கு எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி மூன்று வாரங்களில் பூரண குணமளித்து மருத்துவ உலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குருசடி பகுதியைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தனது தோட்டத்தில் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பாட்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் இந்த விபத்து நேரிட்டது. இதில் முதியவரின் முகம், மார்பு, வயிறு, கைகள் மற்றும் கால்கள் என உடலின் பெரும்பகுதி கருகியது. வயது முதிர்வு ஒருபுறமிருக்க, அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் ‘பார்கின்சனிசம்’ (Parkinsonism) எனும் தீவிர நரம்பியல் குறைபாடு இருந்ததால், அவரது உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே கருதப்பட்டது.
உடனடியாக நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பிளாஸ்டிக் மற்றும் தீக்காய சிகிச்சை நிபுணர் டாக்டர் பெலிக்ஸ் கார்டிலியா தலைமையில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) நிபுணர் டாக்டர் ராமன் முரளிதரன், உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர் ஹெனித் ராஜ், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் பிரத்யேக செவிலியர் குழுவினர் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சையைத் தொடங்கினர். உடலில் ஏற்பட்ட கடும் நீரிழப்பைத் தடுக்க உடனடி சீரம் (IV fluids) மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் வழங்கப்பட்டதோடு, தீக்காயமடைந்த பகுதிகள் அதிநவீன ‘டிரெசிங்’ முறைகள் மூலம் கிருமித்தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்பட்டன. பொதுவாக இவ்வளவு அதிகமான தீக்காயங்களுக்கு இறந்த திசுக்களை அகற்றும் அறுவை சிகிச்சையோ அல்லது தோல் மாற்று அறுவை சிகிச்சையோ (Skin Grafting) கட்டாயமாகத் தேவைப்படும். ஆனால், இங்கு மருத்துவர்களின் துல்லியமான கண்காணிப்பு மற்றும் நவீன மருந்து கையாளுதல் காரணமாக, வெறும் மூன்று முறை மட்டுமே டிரெசிங் மாற்றப்பட்ட நிலையில் காயங்கள் மிகவேகமாக ஆறத் தொடங்கின.
எந்தவிதமான அறுவை சிகிச்சை தையல்களோ அல்லது ரத்த இழப்போ இன்றி, வெறும் 21 நாட்களில் அந்த முதியவர் முழுமையாகக் குணமடைந்து நடக்கத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது எவரது உதவியுமின்றி தனது அன்றாடப் பணிகளை அவரே கவனித்து வரும் நிலையில், சவாலான இந்தச் சிகிச்சை வெற்றி குறித்து டாக்டர் பெலிக்ஸ் கார்டிலியா கூறுகையில், அதிநவீன மருத்துவ வசதிகள் மற்றும் பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியே இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதிக சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் சரியான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் முதியவர்களையும் அறுவை சிகிச்சையின்றி காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
