நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பணிச் சுமைக்கு உட்பட்டிருந்ததாக கூறப்படும் பெண் போலீஸ் அதிகாரி ஓய்வறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்
48 வயதான காமாட்சி, ராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (Special SI) பணியாற்றி வந்தார். நேற்று (ஜூலை 2) இரவு ரோந்து பணியை முடித்து, நள்ளிரவு 2 மணியளவில் காவல் நிலையம் திரும்பிய காமாட்சி, அங்கிருந்த ஓய்வறையில் உறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த காலை 6 மணிக்கு, தனது கணவர் விஜயகுமாருக்கு அழைப்பு வைத்த காமாட்சி, “நான் வர முடியாது, பிள்ளைகளை நீ அனுப்பு” என கூறியுள்ளார். இதன்பின், மேலும் இரண்டு முறை கணவர் தொடர்புகொள்வதற்கு முயற்சி செய்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. பின்னர் காலை 11.30 மணியளவில், ராசிபுரம் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இருந்து வந்த அழைப்பில் காமாட்சியின் மரண செய்தியை உறுதிப்படுத்தியது.
காமாட்சியின் மரணம் தொடர்பாக உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். “விடுப்பு கேட்க முடியாத அளவுக்கு டார்ச்சர் செய்தீங்க… அதனால்தான் இவங்க உயிரோட இல்ல!” என தங்கை கதறி அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
“முதலுதவி சிகிச்சை கூட வழங்கவில்லை!” என உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், உடலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், காமாட்சியின் உடல் உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, கடந்த 90 நாட்களில் காமாட்சிக்கு 42 நாட்கள் மருத்துவ விடுப்பு, 2 நாட்கள் சாதாரண விடுப்பு, 3 நாட்கள் அனுமதி விடுப்பு மற்றும் ஒரு நாள் திருமண நாளுக்கான சிறப்பு அனுமதி என மொத்தம் 46 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி காவல்துறையின் மதிப்புக்கு சேதம் விளைவிக்கிறார்கள் என்றும், இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் குறித்து, “முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பால் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது” என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதி மருத்துவ அறிக்கைக்கு பிறகு மட்டுமே மரணத்திற்கான காரணம் உறுதியாகத் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.