ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவிற்காகத் திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்புப் பணிக்காகப் பரமக்குடிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மணி நகர் பகுதியில் உள்ள புறநகர் காவல் சோதனைச் சாவடியில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அதே பகுதியில் பரமக்குடி நகர் காவல் நிலைய வாகன ரோந்து பிரிவு சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) முத்துப்பாண்டி (58) என்பவரும் பணியில் இருந்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீசார், அங்குள்ள சோதனைச் சாவடி மையக் கழிவறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
மூன்று பெண் போலீசார் கழிவறைக்குச் சென்று வந்த நிலையில், நான்காவதாகச் சென்ற பெண் போலீஸ் கழிவறையில் உள்ள வாஷ்பேஸின் கீழ்ப் பகுதியில் கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்தப் பாலித்தீன் கவரை எடுத்துச் சோதித்தபோது, அதில் சிறிய துளையிடப்பட்டு உள்ளே ஒரு செல்போன் கேமரா செயல்படும் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த செல்போனில் வீடியோ பதிவாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அதனைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இது குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், அந்த செல்போன் அங்குப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. முத்துப்பாண்டியினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில், பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறப்புச் சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டியை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஏற்கனவே பலமுறை இது போன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றியபோது, பிறந்தநாள் விழாவில் பெண் போலீசாருக்குக் கேக் ஊட்டிவிட்ட விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணி ஓய்வு பெற இன்னும் சில காலமே உள்ள நிலையில், ஒரு மூத்த அதிகாரி சக பெண் ஊழியர்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது காவல்துறைக்கே பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறை ரீதியான விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.













