ஆலங்காயம்: கருக்கலைப்பு ஏற்பாடு செய்த பெண் புரோக்கர் ஒருவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா, இளவரசி ஆகியோர் கருக்கலைப்பு புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததாக தகவல் கிடைத்தது. இவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கள்ளக்குறிச்சியில் ஸ்கேன் செய்து, பின்னர் திருப்பத்தூர் பகுதியில் கருக்கலைப்பு செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் உறுதியானது.
இந்த தகவலின் பேரில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் அருகே அரித்தான் வட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி தேவி, ஜோலார்பேட்டைச் சேர்ந்த கர்ப்பிணி விஜி மற்றும் ஒரு முஸ்லிம் பெண் உள்ளிட்ட மூவருக்கும் கருக்கலைப்பு செய்ய, அரித்தான் வட்டத்தில் உள்ள தேவி வீட்டில் கூடி இருந்தனர்.
அந்த சமயம் போலீசார் சோதனை நடத்தி, புரோக்கர் கவிதாவை கைது செய்தனர். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.