எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்ததை அடுத்து, இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 11 சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலை பல ஆண்டுகள் கழித்து திடீரென வெடித்தது. அதன் காரணமாக சாம்பல் புகை பல நூறு மைல்கள் தொலைவு வரை பரவி, அந்தப் பகுதி வான்வெளி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட பாதைகளில் விமானங்கள் பறப்பதைத் தவிர்க்குமாறு ஆணையிட்டுள்ளது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA).
DGCA எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஏர் இந்தியாவும் இன்று (நவம்பர் 24) மற்றும் நாளை (நவம்பர் 25) இயக்கப்பட இருந்த 11 விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:
நவம்பர் 24
நேவர்க் – டில்லி
நியூயார்க் – டில்லி
துபாய் – ஐதராபாத்
தோஹா – மும்பை
துபாய் – சென்னை
தம்மம் – மும்பை
தோஹா – டில்லி
நவம்பர் 25
சென்னை – மும்பை
ஐதராபாத் – டில்லி
மும்பை – ஐதராபாத் – மும்பை
மும்பை – கோல்கட்டா – மும்பை
ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆகாசா ஏர், இண்டிகோ, கேஎல்எம் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் இந்த சூழ்நிலையை முன்னிட்டு சில சேவைகளை ரத்து செய்துள்ளன.
