தஞ்சாவூரில் நடைபெற்ற அரசுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை (இ.பி.எஸ்.) கடுமையாக விமர்சித்தார். “அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்.,” எனச் சாடிய அவர், அவரது அறிக்கைகள் தனக்குள் உள்ள குழப்பங்களையும், கூட்டணிக் குழப்பங்களையும் மறைப்பதற்காகவே என்று கூறினார்.
முதல்வரின் விமர்சனம் :
“சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. தமிழகத்தின் உரிமையை காவிரியில் நிலைநாட்டியது தி.மு.க.,தான்,” எனத் தெரிவித்த முதல்வர், “இன்றைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பி கொண்டு இருக்கிறார். அரசியல் அறிக்கைகளை துல்லியமாகவும், செய்திகளை வாசித்த பிறகும் வெளியிட வேண்டும். ஆனால் அவர் செய்திகளை படிக்காமலேயே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது அரைவேக்காட்டு அறிக்கைகள்தான்,” என குற்றம்சாட்டினார்.
புதிய அறிவிப்புகள் :
விழாவில் பல முக்கிய திட்டங்களும் முதல்வரால் அறிவிக்கப்பட்டன :
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும்.
வெண்ணாறு, வெட்டாறு நதிகள் சந்திக்கும் பகுதியில் ரூ.42 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும்.
கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், ரூ.70 கோடியில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளதாகவும், கும்பகோணம்-மன்னார்குடி சாலைப் பணிகள் 90% முடிந்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கான புதிய திட்டம் :
விழாவில், 8 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டதாகவும் முதல்வர் அறிவித்தார். மக்கள் மனுக்களுக்கு அரசு எடுத்துச் செய்யும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் நலனுக்காகவே தம் அரசு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.