மதுரையில் எம்பார் ரத்னா எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: டாக்டர் பா.சரவணன் எழுச்சி உரை

அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மதுரையில் அக்கட்சியின் மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் எழுச்சியுடன் நடைபெற்றன. மதுரையின் முக்கியப் பகுதிகளான செல்லூர், கோரிப்பாளையம் மற்றும் தத்தனேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த விழாக்களில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு ‘புரட்சித் தலைவருக்கு’ புகழாரம் சூட்டினர். செல்லூர் பந்தல்குடி திருவள்ளுவர் இளைஞர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா மற்றும் கபடிப் போட்டிகளை டாக்டர் பா.சரவணன் தொடங்கி வைத்து, வீரர்களை உற்சாகப்படுத்தியதோடு, வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிச் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கிக் கௌரவித்தார்.

இந்த விழாவின் ஒரு சிறப்பம்சமாக, மதுரையின் கலாச்சாரத்தையும் வீர விளையாட்டுகளையும் காண வந்திருந்த இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள், டாக்டர் பா.சரவணன் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அவர்களிடம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழகம் கண்ட வியக்கத்தக்க வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து டாக்டர் பா.சரவணன் ஆங்கிலத்தில் விரிவாக எடுத்துரைத்தார். தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் முதல் தொட்டில் குழந்தைத் திட்டம் வரையிலான சாதனைகளைக் கேட்டறிந்த வெளிநாட்டுப் பயணிகள், ஒரு மக்கள் தலைவரின் தொலைநோக்குப் பார்வையை வியந்து பாராட்டி மெய்சிலிர்த்தனர்.

தொடர்ந்து, கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் 18-வது வட்டச் செயலாளர் ஜி.கே.பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் பா.சரவணன் பங்கேற்று, நூற்றுக்கணக்கான ஏழை எளிய பொதுமக்களுக்குப் புத்தாடைகள், வேட்டி-சேலைகள் மற்றும் அத்தியாவசிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தத்தனேரி பாக்கியநாதபுரம் பகுதியில் மகளிரணி நிர்வாகி பாண்டிச்செல்வி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அப்பகுதி மக்களுக்குச் சிறப்பான அன்னதானத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அரசியல் பணிகளுடன் மக்கள் சேவையையும் இணைத்துச் செய்த இந்த நிகழ்வுகள் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை இளைஞர் கழக நிர்வாகிகள் பிரேம்குமார், விமல், மகேந்திரன், ராமநாதகுமார், சுரேந்தர், லட்சுமணன், சமாதான பிரபு உள்ளிட்ட பலர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். மதுரையின் மூலை முடுக்கெங்கும் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் பாடல்கள் ஒலிக்க, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகப் புரட்சித் தலைவரின் பிறந்தநாள் மதுரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிமுகவின் சாதனைகளை இளைய தலைமுறையினரிடமும், சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு சேர்த்த இந்த நிகழ்வு, வரும் காலங்களில் கட்சியின் வலிமையை நிரூபிக்கும் ஒரு களமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version