“அரசியல் ரகசியம் காக்கும் எடப்பாடியார்”: அதிமுக கூட்டணியில் இணைகிறாரா டிடிவி தினகரன்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளது மாநில அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக (அன்புமணி அணி), தேமுதிக போன்ற கட்சிகளைத் தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைத்துள்ள எடப்பாடியார், தற்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டு வரத் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷா உடனான இந்த நள்ளிரவுச் சந்திப்பு, சிதறிக்கிடக்கும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை ஓரணியில் திரட்டும் முயற்சியின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணைய உள்ளன” என்று சூசகமாகத் தெரிவித்தார். குறிப்பாக, ‘டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைவாரா?’ என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அரசியலில் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாது; சில விஷயங்கள் ரகசியமாக இருந்தால் தான் அதற்கு ஒரு மரியாதை உண்டு” என்று அவர் அளித்த பதில், அமமுகவின் வருகையை கிட்டத்தட்ட உறுதி செய்வதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்பதில் எடப்பாடியார் உறுதியாக உள்ளார்.

தற்போதைய தகவல்களின்படி, பாஜகவிற்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளில் இருந்து சுமார் 10 தொகுதிகளை அமமுகவிற்கு வழங்க பாஜக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை, சிவகங்கை, தேனி மற்றும் ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு இருக்கும் கணிசமான வாக்கு வங்கி, அதிமுகவின் வெற்றிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2021 தேர்தலில் அமமுக பிரித்த வாக்குகள் அதிமுகவின் வெற்றியைப் பாதித்த நிலையில், இந்த முறை அந்த வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் ஒரே அணியில் திரள்வது, தமிழகத்தில் ஒரு வலுவான மாற்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழகத்தில் தினகரனின் செல்வாக்கும், வட தமிழகத்தில் அன்புமணியின் பலமும் இணைவது திமுகவிற்குப் பெரும் சவாலாக அமையும். இருப்பினும், தொகுதிப் பங்கீடு மற்றும் ‘கூட்டணி ஆட்சி’ என்ற பாஜகவின் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே இந்தக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்.

Exit mobile version